Homeஇலங்கைமனித உரிமை மீறல்களுக்கு இராணுவமும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது - சரத் பொன்சேகா

மனித உரிமை மீறல்களுக்கு இராணுவமும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது – சரத் பொன்சேகா

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் இராணுவத்தினராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட நால்வருக்கு பிரித்தானிய அரசு பயணத் தடை விதித்தது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய சரத் பொன்சேகா, ஜகத் ஜயசூரிய மற்றும் வசந்த கரண்ணாகொட ஆகியோர் போர்க்களத்தில் முன்வரிசையில் நின்று போரிடாதவர்கள் எனவும், பின்வரிசையில் இருந்தவர்கள் எனவும் தெரிவித்தார். “போர்க்களத்தின் பின்வரிசையில் ஏதேனும் தவறுகள் நடந்திருந்தால், அவை விசாரிக்கப்பட வேண்டும். நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருந்தேன். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் இவர்கள் இருவர் பற்றி நாடாளுமன்றத்திற்குள் விமர்சித்துள்ளேன்,” என அவர் மேலும் கூறினார்.

அதேவேளை, போர்க்களத்தில் முன்னரங்கில் நின்று போரிட்ட சவேந்திர சில்வா எவ்வித தவறும் செய்யவில்லை என்பதை உறுதியாகக் கூற முடியும் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

“மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை,” என அவர் மேலும் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

Most Popular