“தமிழகத்திலிருந்து எனக்கு கடிதம் எழுதுபவர்களின் கையெழுத்து ஆங்கிலத்திலேயே உள்ளது. எனக்கு எழுதும் கடிதங்களில் தமிழில் கையெழுத்திடுங்கள். தலைவர்களின் கையெழுத்தாவது தமிழில் இருக்கக் கூடாதா?” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்கு வந்துள்ள மோடி, ராமேஸ்வரத்தில் 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். நிகழ்வில் “வணக்கம்” என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: “என் அன்பு தமிழ் உறவுகளே, இன்று ராமநவமி, ஒரு புனித நாள். சற்று முன்னர் அயோத்தி ராமர் கோவிலில் ராமரின் நெற்றியில் சூரிய கதிர்கள் பட்டு ஒளிர்ந்தன. தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து முழு நாட்டு மக்களுக்கும் ராமநவமி வாழ்த்துகள். இன்று ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்தது எனது பாக்கியமாக கருதுகிறேன். 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை இன்று ஒப்படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ராமேஸ்வரம், பாரத ரத்னா அப்துல் கலாம் பிறந்த பூமி. பாம்பன் பாலம் இந்தியாவின் முதல் செங்குத்து பாலமாகும்.
வளர்ச்சியும் ஆன்மீகமும்
ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை என்பதற்கு அப்துல் கலாமின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. புதிய பாம்பன் பாலம் தொழில்நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் உள்ளடக்கியது. ராமேஸ்வரம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புகளே அடிப்படை.
இருமடங்கு முன்னேற்றம்
புதிய ரயில் திட்டங்களால் ரயில்வே துறை நவீனமயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் ஒன்றிணைந்தால் நாடு வளர்ச்சியடையும், வலிமை பெறும். சுற்றுலா மற்றும் வணிகத்திற்கு புதிய பாம்பன் பாலம் வழிவகுக்கும். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் இரு மடங்கு உயர்ந்துள்ளது.
மும்மடங்கு நிதி
நாட்டின் திறன்கள் வெளிப்பட்டு வருகின்றன. தமிழகம் நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு மும்மடங்கு நிதி வழங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழக ரயில்வேக்கு ஏழு மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அழுதால் என்ன ஆகும்?
மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு அழுவதை தவிர வேறு தெரியாது. அழுது கொண்டிருப்பவர்களால் அழுவதை தவிர வேறு செய்ய முடியாது.
12 லட்சம் வீடுகள்
இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2014க்கு முன் ரயில்வே துறைக்கு குறைவான நிதியே ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் 4,000 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க ஆட்சியில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மக்களின் பயணத்தை எளிதாக்கியுள்ளது. ஏழைகளுக்கு 12 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
மலிவு விலை மருந்துகள்
தமிழகத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் ஒரு கோடி பேர் பயனடைந்துள்ளனர். மருந்துகள் தேவைப்பட்டால் மக்கள் மருந்தகங்களில் வாங்குங்கள். அங்கு 80 சதவீத தள்ளுபடியில் மருந்துகள் கிடைக்கின்றன. தமிழகத்தில் 1,400க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் இயங்குகின்றன. இதன் மூலம் மக்கள் 700 கோடி ரூபாய் சேமித்துள்ளனர்.”