Homeஅரசியல்அமைச்சரவையில் நிதி மோசடி குற்றவாளி? - தமிழரசு எம்.பி. குற்றச்சாட்டு

அமைச்சரவையில் நிதி மோசடி குற்றவாளி? – தமிழரசு எம்.பி. குற்றச்சாட்டு

உர கூட்டுத்தாபனத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டு சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு, தப்பியோடி அரசாங்கத்திற்கு 40 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய ஜயகொடி என்பவர் தற்போதைய அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகிப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விடயத்தின் உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் அல்லது அந்த அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த வெள்ளிக்கிழமை (21) பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர், “கடற்றொழில் அமைச்சர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு சில விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழரசுக் கட்சியின் வேட்புமனுக்கள் எதுவும் நிராகரிக்கப்படவில்லை. மன்னாரில் நிராகரிக்கப்பட்ட ஒரு வேட்புமனு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வோம். அனைத்து சபைகளையும் நாங்கள் கைப்பற்றுவோம்,” என்றார்.

“தேர்தலில் வெற்றி பெற தலைவர் பிரபாகரனின் பெயரைக் குறிப்பிடும் நிலைக்கு அரசாங்கம் வந்துள்ளதை வாழ்த்துகிறோம். ஆனால், வாயால் மட்டுமே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்தி பற்றி பேசுகிறீர்கள். ஆறு மாத ஆட்சியில் எதையும் செய்யவில்லை. வட மாகாணத்திற்கு எதையும் செய்யவில்லை, செய்யப்போவதுமில்லை. வாக்களித்த மக்கள் இப்போது விளங்கிக்கொண்டுள்ளனர்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை பற்றி பேசும் நீங்கள், உடளகம மற்றும் பரணமக ஆணைக்குழுக்கள், கொல்லப்பட்ட தமிழ் மக்கள் பற்றி பேசவில்லை. இதைச் சுட்டிக்காட்டிய போதே அமைச்சர் சபையை விட்டு வெளியேறுகிறார். வரி நிவாரணம் மற்றும் வரி விதிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கையை பலமுறை கேள்விக்குள்ளாக்கினேன். சிகரெட் நிறுவனத்திற்கு 56 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் ஏனைய நிறுவனங்களுக்கு 96 சதவீத வரி அறவிடப்பட்டுள்ளது. சிகரெட் நிறுவனத்திற்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகை எனக் கேட்டேன். இதற்கு இன்னும் பதில் இல்லை,” என்று அவர் கேள்வியெழுப்பினார்.

மேலும், “மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியில் ஒரு தரப்பினர் பெற்ற கடன்கள் இன்னும் அறவிடப்படாத நிலையில், அவற்றை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனக் கேட்டேன். இதுவரை பதில் இல்லை. இந்த அரசாங்கம் நடுத்தர மக்களுக்கு பாரிய அநீதி இழைத்துள்ளது,” எனவும் தெரிவித்தார்.

“2004 ஆம் ஆண்டு விவசாயத்துறை அமைச்சராக இருந்த போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பொது மேலாளராக ஜயகொடி, மனிதவள முகாமையாளராக மல்லிகா, தொழில்நுட்ப முகாமையாளராக திசாநாயக்க என்பவரை நியமித்தார். 2015 இல் மனிதவள முகாமையாளர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். 2012-2013 காலப்பகுதியில் உர கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஜயகொடி, நிதி மோசடியில் ஈடுபட்டு தப்பியோடினார். இதனால் 40 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டது. அவர் தற்போது அமைச்சரவையில் உள்ளார். இதன் உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்,” எனவும் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

Most Popular