மட்டக்களப்பு சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த நால்வருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வெள்ளிக்கிழமை (21) மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி, சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவர் ரி-56 துப்பாக்கியால் அப்பகுதியில் இயங்கி வந்த ஆயுதக் குழுவொன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக, சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த தி. கிருஸ்ணரூபன், வ. திருச்செல்வம், கு. பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய நால்வரை ஏறாவூர் காவல் துறையினர் கைது செய்து, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி ரி.ஜே. பிரபாகரன், குறித்த நால்வரும் குற்றவாளிகள் என உறுதி செய்து, அவர்களுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.