இலங்கை மருத்துவ வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, தெற்காசியாவிலேயே முதன்முறையாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன '4D Angio CT Suite' சிகிச்சை அறை, கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் இன்று (25) மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்தத் திட்டமானது ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) 1.2 பில்லியன் ரூபாய் பெறுமதியான நன்கொடையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. ஜப்பானியத் தூதுவர் மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த அதிநவீன வசதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
4D Angio CT தொழில்நுட்பம் என்றால் என்ன?
இது சி.டி ஸ்கேனர் (CT Scanner) மற்றும் ஆஞ்சியோகிராபி (Angiography) ஆகிய இரண்டு நவீன வசதிகளையும் ஒரே அறையில், ஒரே மேசையில் உள்ளடக்கிய ஒரு தொழில்நுட்பமாகும். இதன் மூலம் நோயாளிக்குச் அறுவை சிகிச்சை செய்யும் அதே நேரத்தில், உடலின் உட்பகுதிகளை '4D' தரத்தில் மிகத் துல்லியமாகப் பார்க்க முடியும். இது ஆசியாவிலேயே ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளுக்கு அடுத்தபடியாக இலங்கையிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்
இந்த அதிநவீன '4D Angio CT' தொழில்நுட்பத்தின் வருகையானது, இலங்கை நோயாளிகளுக்குப் பல வழிகளில் வரப்பிரசாதமாக அமையவுள்ளது. குறிப்பாக, புற்றுநோய் கட்டிகள் மற்றும் இருதயத் தமனிகளில் காணப்படும் நுணுக்கமான அடைப்புகளை முன்னெப்போதும் இல்லாதவாறு மிகத் துல்லியமாகக் கண்டறிந்து அகற்றுவதற்கு இது வழிவகுக்கின்றது. முன்னதாக, வெவ்வேறு அறைகளில் தனித்தனியாகச் செய்யப்பட வேண்டிய பரிசோதனைகள் அனைத்தும் இப்போது ஒரே இடத்தில், ஒரே மேசையில் செய்யப்படுவதால், நோயாளிக்கு மயக்க மருந்து வழங்கப்படும் காலநேரம் கணிசமாகக் குறைவதோடு, சிகிச்சையின் போது ஏற்படும் அலைச்சல்களும் தவிர்க்கப்படுகின்றன.
மேலும், சத்திரசிகிச்சை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போதே அதன் வெற்றியை மருத்துவர்கள் நேரலையில் (Live) கண்காணிக்கும் வசதி இதில் உள்ளதால், தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. இதனால் நோயாளிகள் மீண்டும் மீண்டும் மேலதிக அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளாக வேண்டிய தேவையிருக்காது என்பதுடன், மிகக் குறுகிய காலத்திலேயே அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பவும் இது ஏதுவாக அமையும்.
புற்றுநோய் சிகிச்சையில் புதிய பாய்ச்சல்
குறிப்பாக கல்லீரல் புற்றுநோய் (Liver Cancer) மற்றும் மூளைத் தமனிகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்த '4D Angio CT' முறையின் மூலம் மேற்கொள்ளப்படும் 'Interventional Radiology' சிகிச்சைகள் மிகச் சிறந்த பலனைத் தரும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.
தெற்காசியாவிலேயே இவ்வாறானதொரு வசதி வேறு எந்த நாட்டிலும் இல்லாத நிலையில், வெளிநாட்டு நோயாளர்களை ஈர்க்கும் 'மருத்துவச் சுற்றுலா' (Medical Tourism) மூலமும் இலங்கை வருமானம் ஈட்ட இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.







