புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, அந்த நபரின் உடலமைப்புக்கு ஏற்றவாறு பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட (Personalized) புற்றுநோய் தடுப்பூசியை ரஷ்யா முதன்முறையாகச் செலுத்திப் பரிசோதித்துள்ளது. மருத்துவ உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இந்தச் சாதனை குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சு இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவினால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தச் சோதனை ரீதியிலான புற்றுநோய் சிகிச்சைத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இத்தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான மருந்துகளை வழங்கும் முறைக்கு மாற்றாக, ஒவ்வொரு நோயாளிக்கும் உள்ள புற்றுநோய் கட்டியின் தனித்துவமான பண்புகளைக் கண்டறிந்து, அதற்கேற்ப இந்தத் தடுப்பூசி வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கரோனா தடுப்பூசிகளில் பயன்படுத்தப்பட்ட மேம்பட்ட mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தத் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி, புற்றுநோய் செல்களை இனங்கண்டு அவற்றைத் துல்லியமாகத் தாக்குவதற்கு வழிவகை செய்யும் என ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்தத் தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்டச் சோதனை நிலையிலேயே உள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதன் பாதுகாப்பு மற்றும் வினைத்திறனை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல மருத்துவப் பரிசோதனைகள் அவசியமாகும். புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய யுகத்தைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்தின் கீழ், மேலதிக நோயாளிகளுக்கும் இத்தடுப்பூசியைச் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.









