ஈரானுடனான வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்கப் படைகள் ஈரானின் தரைப்பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போரை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு அபாயகரமான நகர்வாகப் பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் தரைவழித் திட்டங்கள்:
வாஷிங்டன் போஸ்ட் செய்தியின்படி, முழுமையான படையெடுப்புக்குப் பதிலாக ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மற்றும் ஹோர்முஸ் நீரிணையை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளைக் கைப்பற்ற அல்லது அங்கிருக்கும் ஆயுதக் கிடங்குகளை அழிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக மார்ச் 27 அன்று மேலதிகமாக 3,500 வீரர்கள் USS Tripoli கப்பல் மூலம் மத்திய கிழக்கை வந்தடைந்துள்ளனர். "ஜனாதிபதி ட்ரம்ப் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றாலும், அனைத்து வாய்ப்புகளையும் பென்டகன் தயார் நிலையில் வைத்துள்ளது" என வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.
ஈரானின் பதிலடி: "அமெரிக்க வீரர்களைச் சுட்டெரிப்போம்"
அமெரிக்காவின் இந்தத் திட்டங்களுக்கு ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். "எதிரிகள் வெளியில் பேச்சுவார்த்தை பற்றிப் பேசிக்கொண்டு, இரகசியமாகத் தரைவழித் தாக்குதலுக்குத் திட்டமிடுகின்றனர். எமது வீரர்கள் அமெரிக்கப் படைகளின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர். அவர்கள் தரை இறங்கினால் அவர்களைச் சுட்டெரித்துத் தண்டிப்போம்" என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
செங்கடலிலும் புதிய போர்க்களம்?
ஹோர்முஸ் நீரிணையை ஏற்கனவே மூடியுள்ள ஈரான், தற்போது ஏமன் மற்றும் டிஜிபூட்டிக்கு இடையிலுள்ள பாப் அல்-மண்டேப் (Bab al-Mandeb) நீரிணையை இலக்கு வைத்துள்ளது. ஈரானியத் தீவுகள் அல்லது நிலப்பகுதிகள் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால், ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் உதவியுடன் செங்கடல் பாதையையும் மூடி சர்வதேசக் கப்பல் போக்குவரத்தை முடக்கப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானின் சமரச முயற்சி
ஒருபுறம் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், மறுபுறம் பாகிஸ்தான் இராஜதந்திர முயற்சிகளில் இறங்கியுள்ளது. சவூதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை அழைத்து, அமெரிக்கா - ஈரான் இடையே சமரசம் காண்பதற்கான இரண்டு நாள் பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தான் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்துள்ளது.









